ஷா ஆலம், டிச 4- சிலாங்கூர் மாநில பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கு ஏதுவாக தொழில் முனைவோருக்கு உத்வேகமளிக்கக்கூடிய மேலும் பல திட்டங்கள் மற்றும் உதவிகள் அடுத்தாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மனுதாரர்களுக்கு 10,000 வெள்ளி வரை கடனுதவி வழங்கும் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் ஐ-சோசியல் திட்டமும் அதில் அடங்கும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இத்திட்டங்கள் யாவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உதவும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை தொடர்ந்து வழங்கக்கூடிய மாநிலமாகவும் விளங்குவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு தொழில் முனைவோர் பெருவிழாவை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் தனிநபர்களுக்கு உதவும் நோக்கில் 42 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் ஐ-சோசியல் எனும் புதிய கடனுதவித் திட்டம் ஹிஜ்ரா அறவாரியம் மூலம் தொடங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.