ACTIVITIES AND ADSPress Statements

வீட்டில் ஏற்பட்ட தீயில் இரு உடன்பிறப்புகள் கருகி மாண்டனர்- கேம்பாக்கில் சம்பவம்

கோலாலம்பூர், ஜன 2- வீடொன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் இரு உடன்பிறப்புகள் கருகி மாண்டனர். இத்துயரச் சம்பவம் கோம்பாக், ஜாலான் டேவான் சிம்பாங் தீகாவிலுள்ள வரிசை வீடொன்றில் இன்று  அதிகாலை நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில்  நோர் ஷியாசா அல்பிஷியா முகமது பைசான் (வயது 9) மற்றும் அவரின் தம்பியான முகமது அல் குயிம் முகமது பைசான் (வயது 6) ஆகிய இருவரும் உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமீஸ் கூறினார்.

இத்தீச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3.54 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார். இதனைத் தொடர்ந்து செலாயாங் மற்றும் ரவாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 22 வீரர்களோடு கோம்பாக் தன்னார்வலர் தீயணைப்பு நிலைய குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவ்விரு சகோதர சகோதரிகளும் வீட்டின் அறை ஒன்றில் இறந்த கிடக்கக் காணப்பட்டனர். அக்குழந்தைகளின் சடலம் கிடந்த விதத்தை வைத்து பார்க்கையில் அவர்கள் தப்ப வழியின்றி தீயில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார் அவர்

இத்தீச் சம்பவத்தில் அந்த வீடு 70 விழுக்காடு சேதமடைந்ததாக கூறிய நோராஸாம், அதிகாலை 4.43 மணியளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டு இறந்த அவ்விரு சிறார்களின் உடல்களும் மீட்கப்பட்டன என்றார்.

சம்பவம் நிகழ்ந்த போது அப்பிள்ளைகளின் பெற்றோர் வீட்டில் இல்லை என்பதோடு வீட்டின் கதவும் பூட்டப்பட்டிருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :