ரவாங், ஜன 31- இங்குள்ள கம்போங் மிலாயு பெக்கான் ரவாங்கில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையின் போது பொது மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) விதிகளை தளர்த்தியது.
இந்த திட்டத்தில் பங்கேற்ற அனைத்து 150 வாடிக்கையாளர்களுக்கும் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இந்த தளர்வு அறிவிக்கப்பட்டதாக அக்கழகத்தின் வர்த்தக மற்றும் நடவடிக்கை மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகி இஸூல் ஃபாடில் ஹம்சா கூறினார்.
நேற்று வேலை நாள் என்பதால் இந்த விற்பனையில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். எனினும், தங்களின் அண்டை வீட்டுக் காரர்களுக்கும் சேர்த்து பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை விற்பனையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என்றார் அவர்.
விற்பனைக்கு வைக்கப்படும் பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே பொருட்களை வாங்கியவர்கள் மறுபடியும் வரிசையில் நின்று பொருட்களை வாங்க இதற்கு முன்னர் பல இடங்களில் அனுமதி வழங்கியுள்ளோம் என அவர் விளக்கினார்.
பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்ற இந்த விற்பனையில் 500 கோழிகள் 300 தட்டு முட்டைகள், 300 மூட்டை அரிசி ஆகியவை விற்கப்பட்டன என்றும் அவர் சொன்னார்.