சிப்பாங், மார்ச் 9- இங்குள்ள சைபர்ஜெயா மருத்துவனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று அதிகாரப்பூர்வாகத் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் சுல்தானுடன் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மற்றும் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவமனையைத் திறந்து வைப்பதன் அடையாளமாக சுல்தான் தகடு ஒன்றில் தனது கையெழுத்தைப் பதித்தார்.
திறப்பு விழாவுக்குப் பின்னர் சுல்தான் தம்பதியர் கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் சிறார் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டனர்.
கடந்தாண்டு நவம்பர் 11ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை 12.8 ஏக்கர் நிலப்பரப்பில் 50 கோடியே 88 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
ஒன்பது மாடிக் கட்டிடத்தில் 288 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் 14 சிறப்பு மருத்துவச் சேவைகள் கட்டங் கட்டமாக வழங்கப்பட உள்ளன.