ஷா ஆலம், ஏப் 9- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள
அந்நிய வர்த்தக மைய களுக்கு எதிராக ஷா ஆலம் மாநகர் மன்றம்
(எம்.பி.எஸ்.ஏ.) மேற்கொண்ட சோதனையில் ஏழு கடைகள் மீது சீல்
வைக்கப்பட்டு விற்பனைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 3ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இசை சோதனையின் போது கடைத்
தொகுதியின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடியில் வங்காளதேச
மற்றும் மியன்மார் பிரஜைகள் மளிகைக் கடை, துணிக்கடை, சிகை அலங்கரிப்பு நிலையம், மதுபானக் கடை போன்றவற்றை நடத்திவருவது கண்டறியப்பட்டது.
வர்த்தக லைசென்ஸ் இன்றி வியாபாரம் செய்தது, லைசென்ஸ் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த ஏழு கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விற்பனைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.
ஸ்ரீ மூடா பகுதியில் அந்நிய நாட்டினரின் வியாபார நடவடிக்கைகள் வரம்பு
மீறி பெருகி வருவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில் 17 பேர் கொண்ட மாநகர் மன்றத் அமலாக்கப் பிரிவினர் இச்சோதனையை மேற் கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்நிய நாட்டினரின் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் வட்டார பொதுமக்கள் தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என மாநகர் மன்றம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.