சுபாங் ஜெயா, ஜூன் 8- இங்குள்ள யுஎஸ்ஜே 1/2 தொழிற்பேட்டை பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக 400,000 வெள்ளி செலவில் வெள்ள நீர் சேகரிப்புக் குளம் அமைக்கப்படவுள்ளது.
சிலாங்கூர் மாநில வடிகால் நீர் பாசன துறையினால் மேற்கொள்ளப்படும் இந்த வெள்ள நீர் சேகரிப்புக் குள நிர்மாணிப்பு திட்டம் அடுத்த மாதம் தொடங்கி ஆறு மாத காலத்தில் முற்றுப்பெறும் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
இந்த நீர் சேகரிப்பு குளத்தை நிர்மாணிப்பின் மூலம் அந்த தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு உரிய வாய்ப்பு கிட்டும் என்றும் மிஷல் இங் மேய் ஸி கூறினார்.
கடந்த 2021 டிசம்பர் மற்றும் 2022 மார்ச் மாதங்களில் இப்பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இங்குள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் பெரும் இழப்பை எதிர்நோக்கியது அருகே உள்ள இரு அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்த 10,000 குடியிருப்பாளர்களும் பாதிப்புக்குள்ளாகினர் என்று அவர் குறிப்பிட்டார்.
வட்டார மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ள படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள யுஎஸ்ஜே 8, கோர்ட் 6, குட் இயர் சுபாங் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.