ஷா ஆலம், ஜூன் 9- பிரதான சாலையில் 39 விளம்பரப் பதாகைகளைச்
சட்டவிரோதமாகத் தொங்க விட்ட செமினி, பண்டார் தாசேக்
செசுமாவிலுள்ள பல் கிளினிக் ஒன்றுக்கு எதிராகக் காஜாங் நகராண்மைக்
கழகம் குற்றப்பதிவை வெளியிட்டது.
இந்த விளம்பரப் பதாகைகள் தொடர்பான முழுமையான தகவல்
கிடைத்தவுடன் அந்த கிளினிக்கிற்கு எதிராக குற்றப்பதிவு
வெளியிடப்பட்டதாக நகராண்மைக் கழகத்தின் வர்த்தக மற்றும் பொது
உறவுப் பிரிவின் திட்டமிடல் அதிகாரி கமாருள் இஸ்லான் சுலைமான்
கூறினார்.
உரிய அனுமதி இல்லாமல் தங்கள் சேவைகள் தொடர்பான விளம்பரப்
பதாகைகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும் கிளிளிக்குகளுக்கு
எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இத்தகையத் தரப்பினருக்கு எதிராக 2007ஆம் ஆண்டு எம்.பி.கே.ஜே. வர்த்தக
மற்றும் தொழில்துறை துணைச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்
என அவர் மேலும் சொன்னார்.
தாமான் பெலாங்கி மற்றும் பெரனாங் பகுதியில் கடந்த திங்கள் கிழமை
மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லைசென்ஸ் பெற்ற கடன்
வழங்கும் நிறுவங்கள் மற்றும் இதர வகை விளம்பரங்கள் அடங்கிய 41
பதாகைகளும் அகற்றப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.