சுபாங் ஜெயா, ஆக 21- சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எஸ்.) 2023ஆம் ஆண்டிற்கான சூப்பர் லீக் போட்டியின் வெற்றியாளராக எம்.பி.எஸ்.ஏ. எஃப்.சி. வாகை சூடியது. இங்குள்ள்ள எம்.பி.எஸ்.ஜே. அரேனா அரங்கில் நடைபெற்ற இதன் இறுதியாட்டத்தில் போஸ் எப்.சி. குழுவை அது 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த து.
ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பெனால்டி பகுதியிலிருந்து தாக்குதல் ஆட்டக்காரர் மஹாடி அஷாராப் நடத்திய மின்னல் வேகத் தாக்குதல் கோல் காவலரை மீறி வலைக்குள் புகுந்தது.
இவ்வாண்டிற்கான சூப்பர் லீக் போட்டியில் மொத்தம் 18 குழுக்கள் வெற்றியாளர் கிண்ணத்தை வாகை சூடுவதற்காக களம் இறங்கின.
இதனிடையே முன்னதாக நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான எஃப்.ஏ.எஸ். பிரீமியர் லீக் போட்டியில் கிளானா யுனைடெட் குழு புத்ரா பெர்வீரா குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியாளர் கிண்ணத்தை வென்றது.
ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் பினால்டி கட்டத்திற்குள் இருந்து அஸாமுடின் அகில் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. அப்பந்தை கிளானா யுனைடெட் குழுவின் மற்றொரு ஆட்டக்காரரான இல்யா ஃபித்ரி லாவகமாக தலையில் முட்டி கோலாக்கினார்.
இந்த இறுதியாட்டத்திற்கு சிறப்பு வருகை புரிந்த சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற ஆட்டக்காரர்களுக்கு வெற்றியாளர் கிண்ணத்தையும் பரிசுகளையும் வழங்கினார்.