ஷா ஆலம், செப் 1- இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் “பிக்னிக் லக்சாத்தே பாங்கி“ உணவு திருவிழாவில் கலந்து பல்வேறு பதார்த்தங்களை ருசி பார்ப்பதற்குரிய வாய்ப்பு பாங்கி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு கிட்டியுள்ளது.
பாங்கி தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான இந்த உணவுத் திருவிழா பண்டார் பாரு பாங்கி, தாமான் தாசேக் செம்பாக்காவில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறும் என்று தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாரெட்ஸான் ஜோஹான் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள சாத்தே மற்றும் லக்சா உணவு வகைகளை பாங்கி தொகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த உணவுத் திருவிழாவை தாங்கள் நடத்துவதாக அவர் சொன்னார்.
இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த விழாவில் பங்கேற்பதற்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்பதோடு விற்பனைக் கூடாரங்களும் ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பாங்கி தொகுதியில் சாத்தே மற்றும் லக்சா உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை வட்டார மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கும் இந்த விழா பெரிதும் துணை புரியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.