ஷா ஆலம், செப் 1- மின்-வர்த்தகம் தொடர்பான பயிற்சிகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் திட்டத்தை சீடேக் எனப்படும் சிலாங்கூர் மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நிறுவனங்கள் பங்கேற்கும் என்று அக்கழகத்தின் மின்-வர்த்தகப் பிரிவு நிர்வாகத் தலைவர் முகமது கைருள் இக்வான் முகமது சௌஃபி கூறினார்.
சிலாங்கூர் இ.சி. எக்ஸலேட்டர் எனும் முதலாவது திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
உணவு, பானம் தயாரிப்பு, ஆடை வடிவமைப்பு, வாழ்க்கை முறை, ஒப்பனை, சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டு உள் வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த பயிற்சித் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
எஸ்.ஏ.பி. எனப்படும் சிலாங்கூர் பெமெச்சுட் திட்டத்தை விட இது மாறுபட்டதாக இருந்தது போலும் மூன்று மாத கால பயிற்சி உட்பட சில அம்சங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும். மின்-வர்த்தக தளங்கள் மூலம் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனங்களை நாங்கள் இலக்காக கொண்டுள்ளது மட்டுமே இதில் வேறுபட்ட அம்சமாகும் என்றார் அவர்.
முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை பெறும் அதேவேளையில் இதன் பங்கேற்பாளர்கள் பத்து லட்சம் வெள்ளி வரை வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் தங்களின் தயாரிப்பு பொருட்களுக்கு பத்து லட்சம் ஆடர்கள் வரை பெறுவதற்கும் உதவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.