ஷா ஆலம், செப் 22- மாநிலத்திலுள்ள கூட்டரசு சாலைகளைப் பராமரிப்பது மற்றும் தரம் உயர்த்தும் பணிகளுக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர நிதியை 80 கோடி வெள்ளியாக உயர்த்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது மாரிஸ் எனப்படும் மலேசிய சாலை தகவல் தரவு முறையின் கீழ் ஆண்டுதோறும் 40 கோடி முதல் 60 கோடி வெள்ளி வரை சாலை பராமரிப்பு பணிகளுக்கு வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சாலைகளை குறிப்பாக தொழில்பேட்டைப் பகுதிகளில் உள்ள வழித்தடங்களை சீரமைப்பதற்கு இந்த நிதி போதுமானதாக இல்லை என்று அவர் சொன்னார்.
கூட்டரசு சாலைகளின் தரத்தைப் பொறுத்த வரை நாம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகிறோம். சாலைகளை குறிப்பாக தொழில்பேட்டைகளை உள்ளடக்கிய பகுதிகளை சீரமைப்பதற்கு பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.
சாலை பழுது தொடர்பான அதிகமானப் புகார்கள் கிள்ளானிலிருந்து குறிப்பாக கிள்ளான் துறைமுகம் மற்றும் பூலாவ் இண்டா பகுதியிலிருந்து வருகின்றன. ஆகவே, இதனைக் கருத்தில் கொண்டு சாலை பராமரிப்புக்கான வருடாந்திர மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
மாநில அரசுத் தலைமைச் செயலகத்தில் துணை நிதியமைச்சர் 11 ஸ்டீவன் சிம் சீ தலைமையில் நடைபெற்ற 2024 வரவு செலவுத் திட்ட கருத்தறியும் பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அமிருடின் இவ்வாறு சொன்னார்.
இன்ஃப்ராசெல் நிறுவனத்தின் வாயிலாக சிலாங்கூர் அரசு மேற்கொண்ட மெகா சாலை சீரமைப்புத் திட்டத்தின் வாயிலாக மாநிலத்திலுள்ள 80 விழுக்காட்டு சாலைகள் செப்பனிடப்பட்டதாக மந்திரி புசார் கடந்த ஜூலை 21ஆம் தேதி கூறியிருந்தார்.