குவாந்தான், ஜன 26- கேமரன் மலை, புளுவேலி 54வது மைலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்த வேளையில் மேலும் நால்வர் மண்ணில் புதையுண்டனர்.
இந்த நிலச்சரிவு தொடர்பில் இன்று விடியற்காலை 2.51 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கனி கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இன்னும் சிக்கியுள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்திற்கு ஒன்பது தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்ட வேளையில் அந்த இடத்தை அடைவதற்கு அவர்கள் மூன்று கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது என்றார்.
இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.