NATIONAL

பயணப்பெட்டியில் வெ.500,000-உரிமையாளர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

ஷா ஆலம், மார்ச் 26 – புதன்கிழமை டாமன்சாராவில் உள்ள ஒரு  பேரங்காடியின்  வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500,000 வெள்ளி  ரொக்கம் அடங்கிய பயணப் பெட்டி தங்கள் நிறுவனத்திற்குச்  சொந்தமானது என்ற  நிறுவன   இயக்குநர் ஒருவரின் கூற்றை  காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதன் தொடர்பான  வாக்குமூலத்தை வழங்க சம்பந்தப்பட்ட  அந்த இயக்குநர்  முன்வரவில்லை.  இதனால் காவல் துறையால் அவர்களின் கோரிக்கையை சரிபார்க்க வாய்ப்பு கிட்டவில்லை. நாமும் பணத்தை யாரிடமும் வெறுமனே  ஒப்படைத்து விட முடியாது என்று சிலாங்கூர் மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.

அந்த பணம் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று ஒரு புகாரை  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் எனக்கூறிக் கொண்ட ஒரு நபரிடம் இருந்து தாங்கள்   பெற்றதாக  அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில  போலீஸ் தலைமையக நிலையிலான 217வது போலீஸ் தின நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :