ECONOMYMEDIA STATEMENT

மலையேறும் போது வழி தவறிய ஆடவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு

ஷா ஆலம், மார்ச் 28- இங்குள்ள செக்சன் யு16, பெர்சியாரான் ஷோரியா அருகே மலையேறும் போது வழி தவறிய முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

அறுபத்து நான்கு வயதான அந்த முதியவரின் சடலத்தை பொது மக்கள் நேற்றிரவு 7.50 மணியளவில் கண்டு பிடித்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

அந்நபர் நேற்று காலை 9.30 மணியளவில் தனியொருவராக மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் மாலை 3.43 மணியளவில் தன் மகனைத் தொடர்பு கொண்ட அவர், வெளியேறும் வழியைத் தம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை எனக் கூறியதாவும் அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்நபரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களின் முயற்சி தோல்வி கண்ட நிலையில் இரவு 7.50 மணியளவில் பொது மக்களை அவரைக் கண்டு பிடித்தனர் என்றார் அவர்.

அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக அந்த முதியவரின் உடல் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது  என்று முகமது இக்பால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தீடீர் மரணம் என வகைப்படுத்தப்படுள்ளதாகக் கூறிய அவர், இது குறித்து தகவல் அறிந்தவர்கள் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


Pengarang :