ANTARABANGSAECONOMY

பால் வெட்டும் தொழிலாளி வீட்டில் இருந்து துப்பாக்கி, 200 தோட்டாக்கள் கொள்ளை

சிரம்பான், மார்ச் 28- பால் வெட்டுத் தொழிலாளி ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தப்பினர். இச்சம்பவம் தம்பின், கம்போங் ஆயர் கூனிங் செலாத்தானில் நேற்று நிகழ்ந்தது.

ஷோர்ட்கன் 12 போர் ரக துப்பாக்கி மற்றும் 200 தோட்டாக்கள் காணாமல் போனது தொடர்பில் தாங்கள் நேற்றிரவு 9.51 மணியளவில் புகாரைப் பெற்றதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அமிருடின் சரிமான் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கும் இரவு 8.00 மணிக்கும் இடையே நிகழ்ந்துள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறிய அவர், இச்சம்பவம் நிகழ்ந்த போது 60 வயதான அவ்வீட்டின் உரிமையாளர் கிம்மாசில் இருந்தார் என்றார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 457 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமது ஃபாத்துல்மோய்ன் மாட் ஈசா அல்லது தம்பின் மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :