ஷா ஆலம், மார்ச் 28- வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற விருக்கும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி நிலையிலான இலவச சுகாதார பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீ கெம்பாங்கான் பல்நோக்கு மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ‘சிலாங்கூர் சாரிங்’ இயக்கம் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார் .
இந்த இலவச சுகாதார இயக்கத்தில் தொற்றாத நோய்கள் (இதயம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம்) மற்றும் புற்றுநோய் (பெருங்குடல், புரோஸ்டேட், கர்ப்பப்பை வாய், மார்பகம்) ஆகிய சோதனைகள் நடைபெறும்.
மேலும், கண் பரிசோதனைகள் (கிட்டப்பார்வை, விழித்திரை, கிளௌகோமா) மற்றும் பல், காது மற்றும் பிசியோதெரபி போன்ற கூடுதல் பரிசோதனைகளும் நடத்தப்படும் என்று என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் செலங்கா செயலி மூலம் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப் படுகிறார்கள். விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்ட தனிநபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனை வழங்கப்படுகிறது.
பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் 1 800 22 6600 என்ற எண்ணில் செல்கேர் அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம் என்று ஜமாலியா கூறினார்.
இவ்வாண்டு இலவச மருத்துவ பரிசோதனையைத் தொடர 32 லட்சம் வெள்ளி ஒதுக்கப் படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.