NATIONAL

பேரங்காடியில் கண்டெடுக்கப்பட்ட 500,000 வெள்ளிக்கு இன்னும் யாரும் உரிமை கோரவில்லை

ஷா ஆலம், மார்ச் 29 – இம்மாதம் 20ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா,
டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் கண்டு
பிடிக்கப்பட்ட 500,000 வெள்ளி அடங்கிய பயணப் பெட்டிக்கு இன்னும்
யாரும் உரிமை கோரவில்லை.

அந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிய போதிலும் அதற்கு
உரிமை கோரி யாரும் முன்வரவில்லை என்று சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த பணம் தங்களுடையது என கடந்த வாரம் உரிமை கொண்டாடிய
தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் இயக்குநரும் தனது
கோரிக்கைக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களை இன்னும்
முன்வைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

அந்த பணம் தங்களுடையது எனக் கூறிய அந்த நிறுவனம் கடந்த 21ஆம்
தேதி ஷா ஆலமில் போலீஸ் புகார் செய்திருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

எனினும், அந்த பணம் தங்களுடையது என்பதை நிரூபிப்பதற்கான
ஆதாரங்களை அல்லது ஆவணங்களை அந்த நிறுவனம் இதுவரை
டாமன்சாரா போலீஸ் நிலையத்திடம் சமர்பிக்கவில்லை.

டாமன்சாராவிலுள்ள பேராங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் 500,000
வெள்ளி அடங்கிய பயணப் பெட்டி ஒன்றை பாதுகாவலர் ஒருவர் கண்டு
போலீசுக்கு தகவல் கொடுத்தார்.


Pengarang :