NATIONAL

நான்கு கொள்ளையர்களின் தாக்குதலில் வயது முதிர்ந்த டாக்சி ஓட்டுநர் காயம்

ஜாசின், ஏப் 19- பயணிகள் பாவனையில் டாக்சியில் ஏறிய ஒரு பெண்
உள்ளிட்ட நால்வர் முதியவரான டாக்சி ஓட்டுநரிடம்
கொள்ளையிட்டதோடு சுயநினைவு இழக்கும் அளவுக்கு அவரின் கழுத்தை
நெறித்தும் தாக்கியும் காயப்படுத்தினர். இந்தச் சம்பவம் இங்குள்ள ஜாசின்,
ஜாலான் பாரிட் கெலிலிங்கில் உள்ள செம்பனை தோட்டம் ஒன்றில் நேற்று
பிற்பகலில் நிகழ்ந்தது.

அக்கொள்ளையர்கள் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநரின் அடையாளக்
கார்டு, ஏ.டி.எம். கார்டு மற்றும் 300 வெள்ளி ரொக்கம் அடங்கிய பர்ஸ்,
கைப்பேசி ஆகியவற்றோடு அவருக்குச் சொந்தமான புரோட்டோன்
ஈஸ்வரா ரகக் டாக்சியையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றனர்.

நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் தம்பின் பஸ் முனையத்தில் அந்த
முதியவரின் டாக்சியில் ஏறிய அந்த நான்கு கொள்ளையர்களும் அலோர்
காஜாவுக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டதாக ஜாசின் மாட்ட போலீஸ்
தலைவர் டி.எஸ்.பி. அகமது ஜமில் ரட்சி கூறினார்.

செம்பனை தோட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்த அந்த டாக்சி
ஜாலான் பெக்கிலிலிங்கை அடைந்த போது டாக்கியிலிருந்த ஆடவன்
ஒருவன் காரை நிறுத்தும்படி பணித்தான். பின்னர் அந்த ஓட்டுநரின்
கழுத்தை நெறித்த அவ்வாடவன் சுயநினைவை இழக்கும் வரை
தாக்கினான்.

சிறிது நேரம் கழித்து சுய நினைவு திரும்பிய அந்த டாக்சி ஒட்டுநர், முகம்,
கண், உதடு, கால் உள்ளிட்ட இடங்களில் காயமும் வீக்கமும்
ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார் என்று அகமது ஜமில் அறிக்கை ஒன்றில்
சொன்னார்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட
போலீசார் அக்கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 26 முதல் 39 வயது வரையிலான மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர் என்றார் அவர்.

அந்த நால்வரும் புக்கிட் பாருவிலுள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மாலை
6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், திருடப்பட்ட
டாக்சியும் ஹோட்டல் அருகே கண்டு பிடிக்கப்பட்டது என்றார்.


Pengarang :