கோலா லம்பூர், ஆகஸ்ட் 23:
நாட்டில் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து வெளியிட்டு வரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மட்டுமின்றி, திட்டமிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தரப்பினருக்கும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று மலேசிய காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாமீட் பாடோர் நினைவுபடுத்தினார். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப காவல்துறை, பேரணியை ஏற்பாடு செய்யும் தரப்பினர் மற்றும் அதில் பங்கேற்கும் பொது மக்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அப்துல் ஹாமீட் தெரிவித்தார்.
” நாட்டில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுப்பதும் நல்லிணக்க போக்குடன் நடந்துக் கொள்ள வேண்டும்,” என்று தமது அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் பொது மக்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றார். தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம், காட் ஜாவி அறிமுகம் மற்றும் ஜாகீர் நாயக் விவகாரம் குறித்து காவல்துறை நியாயமான விசாரணை நடத்தி வருகின்றனர் என்று விளக்கம் கூறினார்.