ஷா ஆலம், பிப்.21-
கிராமத் தலைவர்கள் தங்கள் பணிகளை மேலும் ஆக்ககரமாக ஆற்றுவதற்கு அவர்களின் ஆற்றலை உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் மொத்தம் 496 கிராமத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று பாரம்பரிய கிராமத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார்.
இவர்களில் 371 பேர் கிராமத் தலைவர்கள், 77 புதுக் கிராமத் தலைவர்கள் மற்றும் 48 இந்திய சமூகத் தலைவர்களும் அடங்குவர் என்றார் அவர். காலை 8 மணிக்கு தொடங்கிய இக்கருத்தரங்கு பிற்பகல் 12 மணி வரையில் இங்குள்ள டேவான் ஜுப்ளி பேராக் சுல்தால் அப்துல் அஜிஸ் ஷா அரங்கில் நடைபெற்றது.
“இக்கருத்தரங்கின் போது சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்களின் பொறுப்புகளை அறிந்து கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட சுமூகத்திற்கு அவர்கள் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்து விளக்கப்பட்டதோடு அவற்றை அவர்கள் நேர்மையாக நிறைவேற்றுவது குறித்தும் விவரிக்கப்பட்டது” என்றார் அவர்.