புத்ராஜெயா, 3 ஜூன்:
சிங்கப்பூர், இந்தோனேசியா, சீனா, கத்தார் மற்றும் ஜப்பானிலிருந்து சுமார் 400 மலேசியர்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்திருக்கிறார். தற்போது அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
“வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய சுமார் 49,206 மலேசியர்கள் ஏப்ரல் 3-ஆம் தேதியிருலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். இதுவரை 38,341 பேர் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து விட்டதை தொடர்ந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்”, என்று அவர் கூறினார். புதன்கிழமை காலை 8.00 மணி தொடங்கி தனிமைப்படுத்தப்படும் 14,820 பேரை உட்படுத்திய 185 தனிமைப்படுத்தும் மையங்கள் செயல்படுவதாக என்று அவர் கூறினார்.
இதனிடையே, புதன்கிழமை 915 மாணவர்கள் 7 விமானங்கள் மூலம் திரும்பியிருக்கும் நிலையில், இன்னமும் தங்கும் விடுதியில் இருக்கும் 702 மாணவர்கள் விரைவில் தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இஸ்மாயில் தெரிவித்தார்.
— பெர்னாமா