ஷா ஆலம், ஏப் 18- தங்கள் நிர்வாகத்தில் இலக்கவியலை முன்கூட்டியே பயன்படுத்தும் நான்கு ஊராட்சி மன்றங்களில் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றமும் ஒன்றாக விளங்குகிறது.
விவேக சிலாங்கூர் திட்டத்திற்கேற்ப கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தாங்கள் செக்நெட் எனப்படும் சிலாங்கூர் கிகாபைட் நெட்வேர் அலைவரிசையைப் பயன்படுத்தி வருவதாக அந்த ஊராட்சி மன்றம் கூறியது.
மக்களுடன் இயங்கலை வாயிலாக கலந்துரையாடுவதில் இந்த செக்நெட் திட்டம் எங்களுக்கு பெரும் துணையாக உள்ளது. மிகவும் எளிதாக கையாளக் கூடிய இத்திட்டம் செலவைக் குறைப்பதிலும் துணை புரிகிறது என்று அறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.
எஸ்.எஸ்.டி.யு. எனப்படும் விவேக சிலாங்கூர் விநியோகப் பிரவின் ஏற்பாட்டில் நேற்று இங்குள்ள விஸ்மா ஏசானில் நடைபெற்ற ஸ்மார்ட் சிலாங்கூர் அடிப்படை வசதித் திட்ட அறிமுக விழாவில் முன்கூட்டியே நெக்நெட் திட்டத்தை அமல்படுத்தியதற்காக உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் கௌரவிக்கப்பட்டது.
மாநிலஅரசின் பொதுச்சேவைத் துறையில் இலக்கவியல் உருமாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சிக்கு துணை நிற்கும் ஊராட்சி மன்றங்களை கௌரவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.