பெட்டாலிங் ஜெயா,மே10 – ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுப்பதற்கு ஏதுவாக வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்துவதற்கு இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தை பயன்பத்திக் கொள்ளும்படி பொது மக்களை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
வீடுகளில் கொசுக்கள் வளர்வதற்கான இடங்கள் அதிகளவில் காணப்படுவது மாநகர் மன்றத்தின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு நடத்தி வரும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அது தெரிவித்தது.
வீட்டு வளாகங்களில் உள்ள பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் அகற்றப்படாத காரணத்தால் மழை காலத்தில் அவற்றில் நீர் தேங்கி கொசுக்கள் வளர்வதற்குரிய சூழல் உருவாவதாக அது கூறியது.
ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் சாத்தியம் உள்ள நீர் தேங்கும் பொருள்களை குடியிருப்பாளர்கள் அகற்ற வேண்டும் என்பதோடு கொசு உற்பத்தியைத் தடுக்க க்கூடிய மருந்துகளையும் அவ்வப்போது தெளிக்க வேண்டும் என மாநகர் மன்றம் வலியுறுத்தியது.
கொசுக் கடியைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக வீட்டின் சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்தும் பணியை காலை மற்றும் பொழுது சாயும் வேளைகளிலும் மேற்கொள்ளும்படியும் அது ஆலோசனை கூறியது.