ஷா ஆலம், ஜூன் 8– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தாக்கல் செய்யவிருக்கிறார்.
‘வெற்றியை நோக்கி ஒன்றிணைந்து செல்வோம்‘ எனும் கருப்பொருளிலான அந்த உதவித் திட்டம் தொடர்பான அறிவிப்பு Selangortv.my மற்றும் Selangortv.TV யூடியூப் வழி நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த ஒளிபரப்பை தனது முகநூல் மற்றும் டிவிட்டர் வழியாக இந்த் ஒளிபரப்பை காணலாம் என்று அமிருடின் கூறியிருந்தார். மேலும், Facebook Media Selangor வழியாகவும் காணலாம்.
மாநில அரசு மக்களுக்கான உதவித் திட்டங்களை அறிவிப்பது இது முதன் முறையல்ல. கடந்தாண்டு கோவிட்-19 நோய்த் தொற்று பீடித்தது முதல் பல உதவித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதலாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட போது 12 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பொருளாதார மீட்சித் திட்டத்தை மந்திரி புசார் அறிவித்தார்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி 27 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான இரண்டாம் கட்ட உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மேலும், கடந்தாண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி 5.58 கோடி வெள்ளி மதிப்பிலான மாநில பொருளாதார மீட்சித் திட்டம் அறிவிக்கப்பட்டதோடு இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி 7.38 கோடி வெள்ளி மதிப்பில் கித்தா சிலாங்கூர் திட்டம் அமல் செய்யப்பட்டது.