ஷா ஆலம், ஜூன் 11– கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் பத்து லட்சம் வெள்ளி நிதியுதவித் திட்டத்தை சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுற்றுலா முகவர்களுக்கு அதற்கு உண்டாகும் செலவினை மாநில அரசு ஈடு செய்ய அந்நிதி பயன்படுத்தப்படும் என்று சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
அமலாக்கத்தின் அடிப்படையில் மொத்த செலவில் 50 விழுக்காட்டுத் தொகையை திரும்ப பெற முடியும் என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
மாநில அரசு அறிவித்துள்ள சுற்றுலா ஊக்குவிப்பு திட்டங்கள் வருமாறு-
- சிலாங்கூர் சுற்றுலா பற்றுச் சீட்டு திட்டம் 2.0
– 50 வெள்ளி மதிப்பிலான 20,000 பற்றுச்சீட்டுகளை வழங்க பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இ- வாலட் எனப்படும் மின் பணப்பை மற்றும் இ-பற்றுச்சீட்டு வாயிலாக விநியோகம் செய்யப்படும்.
- சிலாங்கூர் சுற்றுலா இலக்கவியல மற்றும் பயிற்சித் திட்டம்
– இயங்கலை வாயிலாக இலக்கவியல் மற்றும் வர்த்தக பயிற்சிகளை நடத்த சுமார் மூன்று லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிலாங்கூரில் உள்ள 16 சுற்றுலா சங்கங்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கக் கூடிய நிதியுதவி
– சுற்றுலா திட்டங்களை மேற்கொள்ள ஒவ்வொரு சங்கமும் தலா 15,000 வெள்ளியை பெறும்.
சிலாங்கூர் அரசின் கித்தா சிலாங்கூர் 2.0 பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறைக்கு 25.5 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் அறிவித்தார்.