ஷா ஆலம், ஜூலை 8- ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான இடங்களில் வணிகம் உள்ளிட்ட நடவடிக்கைகள மேற்கொண்டு வருவோருக்கு மோரேட்டோரியம் எனப்படும் வாடகை செலுத்துவதை ஒத்தி வைக்கும் சலுகையை சிலாங்கூர் அரசு வழங்கவுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
வாடகையை செலுத்துவதை ஒத்தி வைக்கும் இச்சலுகையின் வாயிலாக ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அங்காடி கடைகள் உள்ளிட்ட வணிக இடங்களில் வாடகைக்கு இருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலனடைவர் என்று மந்திரி டத்தோஸ்ரீ அமிருன் ஷாரி கூறினார்.
இந்த மோரேட்டோரியம் சலுகையை வழங்குவது தொடர்பான முடிவு நேற்று புதன் கிழமை நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான இந்த மோரேட்டோரியம் சலுகை கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் அல்லாமல் பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது என்றார் அவர்.
மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு மாறுதல்களை ஏற்படுத்துவும் ஆற்றல் இருக்கும் பட்சத்தில் புதியவற்றை அமல்படுத்தவும் மாநில அரசு தயாராக உள்ளதை இந்நடவடிக்கை காட்டுகிறது என்றார் அவர்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்புத் திட்டத்தின் கீழ் ஹிஜ்ரா திட்டத்தில் வர்த்தக கடனுதவி பெற்றவர்களுக்கு ஒன்றரை மாத மோரேட்டோரியம் சலுகையை அரசாங்கம் வழங்கும் என மந்திரி புசார் கடந்த மாதம் 9 ஆம் தேதி அறிவித்திருந்தார்.