ஷா ஆலம், ஜூலை 8- சிலாங்கூர் அரசின் இணைய வர்த்தக ஊக்குவிப்புத் திட்டம் மாநில பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கான சரியான நடவடிக்கையாக அமைந்துள்ளது.
கடந்தாண்டு முதல் நாட்டை உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்றின் எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, மாநிலத்தில் 90 விழுக்காட்டு பொருளாதார நடவடிக்கைகள் முறையாக செயல்பட முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நிலை மாநில பொருளாதாரத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இணைய வர்த்தகம் வாயிலாக பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கான வாயப்பு நமக்கு இன்னும் உள்ளது.
முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு வாயிலாக மேற்கொள்ளப்படும் இ-பாசார் வர்த்தகம் ரமலான் மற்றும் சீனப்புத்தாண்டின் போது அபரிமித வரவேற்பை பெற்றள்ளது என்றார் அவர்.
இந்த இணைய வர்த்தகம் வர்த்தகர்களுக்கு மட்டுமின்றி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் தங்கள் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதிலும் துணை புரிந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.