கிள்ளான், ஆக 4- நோயாளிகள் தரையில் அட்டைகள் மீது அமர வைக்கப்பட்டதாக எழுந்து புகாரை கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் தரையில் அல்லது அட்டைகளில் அமரவைக்கப்பட்டச் சம்பவம் ஏதும் நிகழவில்லை என்பது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி கூறினார்.
நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லாத பட்சத்தில் அவர்கள் தற்காலிகமாக நாற்காலியில் அல்லது சக்கர நாற்காலியில் அமர வைக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தினசரி சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக செயல்படும் வார்டுகளுக்கு மாற்றப்படுவர். அந்த மையமும் குளிர்சாதனம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முழுமையாக கொண்டுள்ளது என்றார் அவர்.
தற்போது தாங்கள் தற்காலிக கள மருத்துவமனையின் நிர்மாணிப்பு பணிகள் முற்றுப் பெறுவதற்காக காத்திருப்பதாகவும் இன்னு சில தினங்களில் அந்த பிரிவு செயல்படத் தொடங்கியவுடன் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சையளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
கிள்ளான் மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்களும் வசதிகளும் இல்லை என்று உள்ளுர் அரசியல்வாதி ஒருவரை மேற்கோள் காட்டி இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.