கோலாலம்பூர், அக் 14- சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி இன்று அதிகாலை 5.00 மணியளவில் முற்றுப்பெற்றது.
அதிகாலை 6.00 மணியளவில் அந்த சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரை நிலைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் நீர் விநியோக பகிர்வு முறைக்கு நீரை அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தக தொடர்பு பிரிவின் தலைவர் எலினா பாஸ்ரி கூறினார்.
இன்று மாலை 5.00 மணி தொடங்கி பொதுமக்களுக்கு நீரை விநியோகிக்கும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
எனினும், பயனீட்டடாளரின் இருப்பிடம் மற்றும் நீர் பகிர்வு முறையில் காணப்படும் நீர் அழுத்தம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் நீர் விநியோக நேரம் மாறுபடும் மாறுபடும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், உலு சிலாங்கூர், உலு லங்காட், கோல சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 998 இடங்களில் நேற்று காலை தொடங்கி நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.