ஷா ஆலம், அக் 16- நீண்ட வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி சுமார் 600 பேர் இங்குள்ள செக்சன் 17 பஸ் முனையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.
அந்த பஸ் முனையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்ட போதிலும் யாரும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடக்கவில்லை என்பது சிலாங்கூர் கினி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
ஓரு வயதே நிரம்பிய தனது முதல் குழந்தைதையை குடும்பத்தாரிடம் காட்டுவதற்காக திரங்கானு, கெமாமானில் உள்ள தன் மாமனார் வீட்டிற்கு செல்வது குறித்து தாம் மிகுந்த மகிழ்சியடைவதாக நோர் ஹபிஸாத்தி முகமது ஹரிரி என்ற பயணி கூறினார்.
இது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குழந்தை. இக்குழந்தையை தாத்தா, பாட்டி இருவரும் என்று பார்க்கவில்லை. இப்போதுதான் முதன் முறையாக அவர்கள் பார்க்கப்போகிறார்கள் என்றார் அவர்.
கிளந்தானிலுள்ள தன் பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர்களிடம் சொல்லாமலே இப்பயணத்தை மேற்கொள்வதாக பொறியியலாளரான அனீசா அரிமி சொன்னார்.
கடந்த ஓராண்டு காலமாக பெற்றோர்களை நான் சந்திக்கவில்லை. திடீரென வீட்டின் வாசலில் நிற்கும் போது அவர்களுக்கு ஏற்படும் பரவசத்தைக் காண ஆவலலுடன் இருக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் 90 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதைத் தொடர்ந்து மாநில எல்லைகளைக் கடப்பதற்கும் உள்நாட்டில் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கடந்த திங்கள்கிழமை அரசாங்கம் அனுமதி வழங்கியது.