ஷா ஆலம், அக் 21- சிப்பாங் மாவட்டத்தில் நேற்று பெய்த கனத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து சிப்பாங்கில் மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக டிங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிஃப் ஷியான் அப்துல்லா கூறினார்.
தாமான் கெமிலாங் சமூக மண்டபம், டிங்கில் ஆரம்ப சமயப் பள்ளி, கம்போங் டத்தோ அகமது ரசாலி ஆகிய இடங்களில் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சிப்பாங் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு அனைத்து உறுப்பினர்களையும் தளவாடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று பிற்பகல் 1.00 மணி முதல் பெய்த அடை மழை காரணமாக லங்காட் ஆற்றில் நீர் பெருக்கெடுத்ததால் ஏழு கிராமங்கள் மற்றும் இரு வீடமைப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
கம்போங் மேரா ஜெயா, கம்போங் லாலாங், கம்போங் அம்பார் தினாங், கம்போங் செம்பிறாய், கம்போங் ஸ்ரீ தஞ்சோங், கம்போங் ஓராங் அஸ்லி, தாமான் டெலிமா, தாமான் பைடுரி ஆகியவையே பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.