கோல சிலாங்கூர், அக் 24- கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்து தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 5,000 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதுவரை எந்த தரப்பிடமிருந்தும் அறவே உதவி பெறாத தரப்பினரை இலக்காகக் கொண்ட இத்திட்டம் இவ்வாண்டு இறுதியில் செயல்படுத்தப்படும் என்று டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாய்செல் கெமான் கூறினார்.
இந்த உணவுக் கூடை விநியோகத் திட்டத்தை இவ்வாண்டிலேயே அமல்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்தில் உதவி பெற தகுதியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு தொகுதி சேவை மையங்களுடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக சொன்னார்.
இங்குள்ள டத்தாரான் மலாவத்தியில் “லேட்ஸ் ரைட் அண்ட ஹெல்ப்“ திட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 600 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாகன அணியை மலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி வழியனுப்பி வைத்தார்.
ஈஜோக், ஜெராம், பெர்மாத்தாங், சுங்கை பாஞ்சாங், சிகிஞ்சான் மற்றும் புக்கிட் மலாவத்தி ஆகியவையே அந்த ஆறு தொகுதிகளாகும்.