ஷா ஆலம், நவ 8- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது ஸ்ரீ செர்டாங் தொகுதி சேவை மையம் 5,000 உணவுக் கூடைகளை விநியோகம் செய்தது.
பொது முடக்கம் முடிவுக்கு வந்த போதிலும் உணவுக் கூடைகளை விநியோகிக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொகுதி சேவை மையத்தின் நிர்வாகி மாஷித்தா இஸ்மாயில் கூறினார்.
வசதி குறைந்தவர்கள் மத்தியில் உணவுக்குப் பற்றாக்குறை பிரச்னை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உணவு தேவைப்படுவோர் தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளும்படி ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தொகுதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இந்த உணவுக் கூடை திட்டம் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. மாறாக, உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அனைவரையும் மையமாக கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
கடந்த ஈராண்டுகளாக கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 110 கோடி வெள்ளி செலவில் பல்வேறு உதவித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 9 ஆம் தேதி கூறியிருந்தார்.