ஷா ஆலம், நவ 23- நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனத்த மழை காரணமாக அம்பாங் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் தீடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஜாலான் ஹில்வியூ, கம்போங் லெம்பா ஜெயா உத்தாரா, கம்போங் லெம்பா ஜெயா செலாத்தான் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.
நேற்றிரவு 7.19 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அம்பாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து 22 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோரஸாம் காமீஸ் கூறினார்.
இரவு 7.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த போது இடுப்பளவு வெள்ளத்தில் அப்பகுதி மூழ்கியுள்ளதை நாங்கள் கண்டோம். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மூவர் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கப்பட்டனர் என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம் வடிந்த போதிலும் அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.