ஷா ஆலம், நவ 23- பத்து லட்சம் வெள்ளியை உட்படுத்திய மானிய உதவித் திட்டம் வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக மீண்டும் அமல்படுத்தப்படும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக சுற்றுலாத் துறையினர் கூறியுள்ளனர்.
சிலாங்கூரிலும் பிற மாநிலங்களிலும் சுற்றுலா நடவடிக்கைளை பிரபலப்படுத்த இந்த மானிய உதவித் திட்டம் பெரிதும் துணை புரியும் என்று மலேசிய சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் (மாட்டா) தலைவர் கோபாலன் மாரியப்பன் கூறினார்.
சுற்றுலாத் துறை வழக்கம் போல் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலும் மற்ற மாநிலங்களிலும் சுற்றுலாவைத் திட்டங்களை பிரபலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த மானிய உதவியை மாநில அரசு தொடர வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
மாநில அரசின் இந்த நிதியுதவி எங்களுக்கு பெரிதும் துணை புரிந்துள்ளது. எனினும் சிலாங்கூருக்கு வெளியே சுற்றுலா நடவடிக்கைகளை பிரபலப்படுத்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு உயிரூட்டுவதற்காக 25 லட்சத்து 50 வெள்ளி மானியத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி அறிவித்தார்.