ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஐ.பி.ஆர். திட்டம் பெயர் மாற்றம் கண்டது ஏன்?  மந்திரி புசார் விளக்கம்

ஷா ஆலம், டிச 4- பெடுலி ராக்யாட் (ஐ.பி.ஆர்.) எனப்படும் மக்கள் நலத்திட்டத்திற்கு “இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங்“ (ஐ.எஸ்.பி.) என பெயர் மாற்றப்பட்டது ஏன் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கியுள்ளார்.

ஐ.பி.ஆர். திட்டங்களில் செய்யப்பட்ட சில சீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இது தவிர, இந்த ஐ.எஸ்.பி. திட்டத்தில் புதிய அம்சங்கள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளதாக  கூறிய அவர், சிலாங்கூர் மாநில மக்களிடையே அன்பை பரிமாறும் கலாசாரத்தை இதன் மூலம் ஊக்குவிக்க முடியும் எனத் தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.

நாங்கள் விருப்பம் போல் பெயர்களை மாற்றுகிறோமா? என்றால் அது நிச்சயம் கிடையாது. நன்கு ஆய்வு செய்து, முந்தைய திட்டங்களில் உள்ள தவறுகளை கண்டறிந்து, சில திட்டங்களை நீக்கி, புதிதாக சில திட்டங்களை சேர்த்தப் பின்னரே விரிவான ஒரு திட்டத்தை உருவாக்குகிறோம் என்றார் அவர்.

மாநிலத்தில் அன்பை விதைக்கும் கலாசாரத்தை  தோற்றுவிக்கும் நோக்கில் இந்த ஐ.எஸ்.பி. கோட்பாட்டை அறிமுகப்படுத்தினோம் என்று மாநில சட்டமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

ஐ.எஸ்.பி. திட்டத்திற்கு பதிலாக ஐ.பி.ஆர். திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் முன்னதாக வலியுறுத்திருந்தார்.

மக்களுக்கு ஐ.பி.ஆர். திட்டம் நன்கு அறிமுகமான நிலையில் இந்த பெயர் மாற்றத்தினால் பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறியிருந்தார்.


Pengarang :