ஷா ஆலம், டிச 10- அண்மையில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்ட அமலாக்கத்தைக் கண்காணிக்க சுயேச்சை குழு ஒன்றை மாநில அரசு அமைக்கவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் யாவும் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசு கடந்த கால அனுபவங்களைப் படிப்பினையாக க் கொள்வதோடு ஏற்கனவே நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது. இது தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு புதிய திட்டங்களையும் அமல்படுத்த விரும்புகிறது என்றார் அவர்.
அறிவிக்கப்பட்ட திட்டங்களின் அமலாக்கத்தை கண்காணிக்கும் பொறுப்பை நாங்கள் மறக்கவில்லை. திட்டங்களின் அடைவுநிலை சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக சுயேச்சை குழு ஒன்றை நாங்கள் அமைக்கவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
வருமானம் ஈட்டுவது, வெளிப்படைப் போக்கு மற்றும் உயர் நெறி ஆகிய அம்சங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூட்டத் தொடரை ஒத்தி வைக்கும் அங்கத்தில் உரையாற்றும் போது அவர் கூறினார்.