ஷா ஆலம், டிச, 10- சிலாங்கூரில் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இலக்கவியல் கட்டண முறை அமல்படுத்தப்படவுள்ளது. எளிதான, விரைவான மற்றும் பாதுகாப்பான ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) மூலம் மின் கூப்பன்களைப் பயன்படுத்தி அனைத்து வாகன நிறுத்துமிடக் கட்டணங்களும் செலுத்தப்படவேண்டும் என்று இத்திட்ட அமலாக்க நிறுவனமான ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் கூறியது.
வாகனமோட்டிகள் தங்கள் வாகனத்தின் எண்களைப் பதிவிட்டு வாகனத்தை நிறுத்தி வைக்கும் நேரத்திற்கு ஏற்ற தொகையை செலுத்தினால் போதுமானது. இது தவிர, அதிகாரப்பூர்வ மின் கூப்பன் முகவர் வாயிலாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும், 7-லெவன், 99 ஸ்பீட் மார்ட், கே.கே.மார்ட் போன்ற பல்பொருள் விற்பனை மையங்களிலும் மின் கூப்பன்களுக்கான தொகையை ஈடு செய்து கொள்ளலாம்.
வரும் ஜனவரி முதல் வழக்கமான கார் நிறுத்தக் கட்டண முறை நிறுத்தப்பட்டு இலக்கவியல் கட்டண முறை அமல் செய்யப்படும் என்று ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.