ஷா ஆலம், டிச 13- சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதை கண்டறிவதற்கு டிரோன் மற்றும் சென்சர் எனப்படும் உணர்திறன் கருவிகளைக் பயன்படுத்தப்படும்.
சாலை பராமரிப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கேற்ற வகையில் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் சொத்துக்கள் மேலாண்மை முறையின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான கும்புலான் செமெஸ்தாவினால் நிர்வகிக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் சாலையில் ஏற்பட்ட பழுது, அதனை சரி செய்த தேதி, காலாவதியாகும் நாள் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.
சாலைகளைப் பராமரிப்பதற்கு மாநில அரசுக்கு ஆண்டொன்றுக்கு 100 கோடி வெள்ளி வரை தேவைப்படுகிறது. சாலைகள் நீண்ட காலத்திற்கு தாக்குப் பிடிப்பதற்கு ஏதுவாக நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கேற்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய துல்லியமான தரவுகள் நமக்கு தேவைப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சாலை சீரமைப்புப் பணிகள் செம்மையாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பொது மக்கள் சாலையில் சீரான பயணத்தை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
இன்று இங்கு குத்தகையாளர்கள் மேம்பாட்டு கருத்தரங்களை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைக்கு இந்த கண்காணிப்பு முறை பொதுப்பணி இலாகாவின் கண்கணிப்பிலுள்ள மாநில சாலைகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், வெகு விரைவில் இது இதர சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.