பூச்சோங், டிச 15- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த சுமார் 7,000 குடும்பங்களுக்கு பால், குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் போன்ற பொருள்கள் வழங்கப்படும்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட முதல் கட்ட விநியோகத் திட்டத்தின் கீழ் இதுவரை 1,510 பேருக்கு சுமார் 200,000 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
சுமார் 5,600 பேரை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது 336,000 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இல்லத்தரசிகளின் சுமையை ஓரளவு குறைப்பதற்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுதற்கும் இத்திட்டம் துணை புரியும் என்று அவர் கூறினார். வசதி குறைந்தவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோர் அருகிலுள்ள சமூக சேவை மையங்களைத் தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்
இங்குள்ள கம்போங் ஸ்ரீ அமான் எம்.பி.எஸ்.ஜே.சமூக மண்டபத்தில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.