ஷா ஆலம், டிச 24- தாமான ஸ்ரீ மூடாவில் மின் விநியோகம் தடைபட்டுள்ளதால் நீர் தடுப்பணை மதகின கதவுகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கதவுகளை தானியங்கி முறையில் அல்லாமல் சுயபலத்தைக் கொண்டு திறக்க வேண்டியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார். எனினும், அந்த கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயற்சிக்கும் போது அதன் இரும்புகள் வளையும் பட்சத்தில் அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என்றும் அவர் சொன்னார். மதகின் கதவுகளுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கும் வகையில் நீரின் அளவை சமப்படுத்தும் விதமாக நீரை இறைத்து வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நான்கு நடமாடும் பம்ப் கருவிகளைக் கொண்டு விநாடிக்கு 960 லிட்டர் நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/12/FW1214970_SG01_18122021_BANJIR_KLANG-1536x989-1-960x618.jpg)