ஷா ஆலம், ஜன 23- கடந்த ஆண்டு முழுவதும் அட்டவணையிடப்பட்டாத 1,562 பராமரிப்பு பணிகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டது. பயனீட்டாளர்கள் சிறந்த குடிநீர் விநியோகச் சேவையைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
இது தவிர, விநியோகிக்கப்படும் நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டதாகவும் சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதும் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டதன் நோக்கங்களில் அடங்கும் என்று அது தெரிவித்தது.
அடுத்த தலைமுறைக்கு நீடித்த நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்களை அமல் செய்து வருகிறோம் என்று பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் குறிப்பிட்டது.
எதிர்காலத் தேவைக்கேற்ப நீடித்த நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 800 கிலோமீட்டர் தொலைக்கு குழாய்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
பழுதடைந்த குழாய்களால் வீணாகும் நீரின் அளவு கடந்த நவம்பர் மாதம் வரை 28.1 விழுக்காடாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 2020 ஆம ஆண்டில் இந்த எண்ணிக்கை 28.6 விழுக்காடாக இருந்தது என அது கூறியது.
இந்த மூன்று மாநிலங்களிலும் பயனற்றுப் போகும் நீரின் அளவை அடுத்தாண்டில் 27 விழுக்காடாக குறைக்கவும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
குழாய்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பயனற்றுப் போகும் நீரின் அளவை கடந்த 2025 ஆம் ஆண்டில் 25 விழுக்காடாக குறைக்க தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் முன்னதாக கூறியிருந்தார்.