ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு குழந்தை பராமரிப்பு பொருள்களை செந்தோசா தொகுதி வழங்கியது

ஷா ஆலம் ஜன 23– அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 60 வசதி குறைந்த குடும்பங்களுக்கு குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.

கடந்த வாரம் தொடங்கி இணையம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கான விண்ணப்பத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

குழந்தைகளுக்கான பால் மாவு, சத்துணவு, பெம்பர்ஸ் மற்றும் பால் போத்தல் உள்ளிட்ட பொருள்கள் சம்பந்தப்பட்ட 60 பேருக்கும் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த பொருள்களை பல்வேறு தரப்பினரிடமிருந்து தாங்கள் பெற்றதாக கூறிய அவர், இவற்றை பகிர்ந்தளிக்கும் பணி தொகுதி சேவை மையம் மற்றும் சுக்கா எனப்படும் சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.

சவால்மிகுந்த நடப்புச் சூழலில் இத்தகைய பொருள்களை வழங்குவதன் மூலம் பெற்றோர்களின் சுமையை ஓரளவு குறைக்க முடியும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை பெய்த அடைமழை காரணமாக சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :