ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நாட்டில் நேற்றுவரை 135.478 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், பிப் 13- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 135,478 பேர் அல்லது 3.8 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, நாட்டில் நேற்று வரை 1 கோடியே 31 லட்சத்து 74 ஆயிரத்து 229 பேர் அல்லது 56 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 36 ஆயிரத்து 160 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், 2 கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 186 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 95 ஆயிரத்து 710 பேர் அல்லது 88.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 73 ஆயிரத்து 770 பேர் அல்லது 92.3 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 142,800 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் 38,851 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 727 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 103,222 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 49 லட்சத்து 21 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 15 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :