கோலாலம்பூர், ஏப் 10 – கோலாலம்பூர் போலீசார் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 30 பேரைக் கைது செய்துள்ளதோடு 805 குற்றப்பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று அதிகாலை 4.00 மணி வரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி ஷரிபுடின் முகமது சாலே கூறினார்.
நகரின் மையப்பகுதி, ஜாலான் பகாங், ஜாலான் துன் ரசாக், ஜாலான் கூச்சிங், ஜாலான் ராஜா லாவுட், அம்பாங்- கோலாலம்பூர் உயர்மட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் 10 பேர் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதற்காகவும் இருவர் போலி பதிவு எண்களைப் பயன்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.
இந்நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 16 முதல் 51 வயதுக்குட்பட்ட அனைவரும் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 45 (A), பிரிவு 42 (1) மற்றும் பிரிவு 108 (3) மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 29 (1) ஆகியவற்றின் கீழ்க் குற்றம் சாட்டப்படுவர் என அவர் தெரிவித்தார்.
இது தவிரப் புகைபோக்கி மற்றும் இயந்திரங்களை மாற்றியமைத்ததற்காக மொத்தம் 36 மோட்டார் சைக்கிள்களும் இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.