கோலாலம்பூர், ஜூன் 4 – கடந்த வியாழக்கிழமை மற்றும் நேற்று அதிகாலை சிலாங்கூர் மற்றும் கெடாவில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கையை முறியடித்த போலீசார், 2 கோடியே 53 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 696 கிலோ போதைப்பொருளையும் கைப்பற்றினர்.
வியாழன் அதிகாலை 2.30 மணியளவில் சிலாங்கூரில் நடந்த முதல் சோதனையில் 1 கோடியே 64 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 404.3 கிலோ ஷாபு, 7.7 கிலோ ஹெராயின் மற்றும் 35.3 கிலோ எக்ஸ்டசி போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் கடத்தல் தடுப்புத் துறையின் இயக்குனர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
அது தவிர, அனைத்துலக மற்றும் உள்ளூர் சந்தைகளுக்கு போதைப்பொருள் கடத்தும் மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அவர் புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கெடாவில் நேற்று காலை நடத்தப்பட்ட சோதனையில் உள்ளூர் சந்தைக்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 25 முதல் 39 வயதுடைய மூன்று ஆடவர்களையும் ஒரு பெண்ணையும் தாங்கள் கைது செய்ததாக அயோப் கான் சொன்னார்.
இந்த சோதனையில் 89 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 248.7 கிலோ ஷாபுவை போலீசார் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார். கடத்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து இக்கும்பல் செயல்பட்டு வருவதாகவும், இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்வதற்காக தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியான்மாரை உள்ளடக்கிய தங்க முக்கோணப் பகுதியில் இருந்து அக்கும்பல் போதைப் பொருட்களைப் பெற்றதாகவும் நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் இந்த இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.