செர்டாங், ஆக 7- கூடுதல் வருமானம் ஈட்டுவதற்குரிய வழிகளில் ஒன்றாக விளங்கும் நவீன விவசாயத்தில் ஈடுபாடு காட்டும்படி மாநிலத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு உணவு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஐந்து அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் சிலாங்கூர் வேளாண் உருமாற்று திட்டத்திற்கு (பெத்தா) ஏற்ப இந்த முன்னெடுப்பு அமைவதாக விவசாயம் மற்றும் விவசாய தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
தற்போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதைக் காண்கிறேன். நடப்புத் தொழில்நுட்பம் மகளிருக்கு நட்புறவானதாக உள்ளதால் மகளிர் உள்பட அனைத்து தரப்பினரும் அதிகளவில் உணவு உற்பத்தி துறையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
நவீன விவசாயத்தை உபரி வருமானமாக அல்லாமல் முதன்மை வருமானமாக ஆக்குவதற்கு ஏதுவாக இளம் தலைமுறையினருக்கு உரிய ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். மரபு சார்ந்த வேளாண் முறையில் இதனை அடைவது சாத்தியமில்லை. காரணம் அம்முறை மிகவும் கடினமானதாகும் என்று அவர் தெரிவித்தார்.
இங்கு நடைபெற்று வரும் 2022 மஹா வேளாண் கண்காட்சியொட்டி பெவிலியன் சிலாங்கூர் கண்காட்சிக் கூடத்தில் டிராகன் பழத்தின் ‘பிங்க் ரூபி‘ எனப்படும் புதிய வகையை அறிமுகம் செய்யும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.