ஷா ஆலம், ஆக 7- நாட்டில் நேற்று 4,684 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகிய வேளையில் 11 பேர் இந்நோயினால் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் நோய்த் தொற்று எண்ணிக்கை 3,927 ஆக இருந்தது.
நேற்று பதிவான தொற்றுகளில் 4,679 உள்நாட்டில் பரவிய வேளையில் ஐந்து சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 5 ஆயிரத்து 834 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயினால் மரணடைந்தவர்களின் எண்ணிக்கையும் 36,020 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
நாட்டில் மொத்தம் 46,904 பேர் இந்நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 56 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெறும் வேளையில் 35 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 45,264 பேர் அல்லது 96.5 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 28 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.