ஷா ஆலம், ஆக 31- கடந்த 1995 ஆம் ஆண்டு மலேசிய கிண்ணத்தை வெற்றி கொண்ட சிலாங்கூர் கால்பந்து குழுவினருக்கு 250,000 வெள்ளி மதிப்பிலான ரூமா இடாமான் சிலாங்கூர் வீடுகள் வழங்கப்பட்டன.
இங்குள்ள டத்தாரான் ஷா ஆலமில் நேற்றிரவு நடைபெற்ற மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது அந்த வீடுகளுக்கான சாவியை விளையாட்டாளர்களின் பிரதிநிதிகளிடம் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒப்படைத்தார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு மலேசிய கிண்ணத்தை வென்ற சிலாங்கூர் குழுவின் வீரர்களுக்கு செமினி துணை மாவட்டத்தின் காஜாங் 2இல் உள்ள ரூமா அபாடி வீடமைப்பு பகுதியில் வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று மந்திரி புசார் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி கூறியிருந்தார்.
ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி ஷா ஆலம் அரங்கில் நடைபெற்ற மலேசிய கிண்ண இறுதியாட்டத்தில் சிலாங்கூர் குழு பகாங்கை 1-0 என் கோல் கணக்கில் வீழத்தி கிண்ணத்தை வாகை சூடியது.
இந்த வெற்றிக்கு காரணமாக விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 0.4 ஹெக்டர் நிலம் வழங்கப்படும் என அப்போதைய மந்திரி புசார் டான்ஸ்ரீ முகமது முகமது தாயிப் வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்டத் தரப்பினர் அமிருடின் உதவியை நாடினர்.