சுபாங் ஜெயா, அக் 5- வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தைக் கொண்டுள்ள கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மேலும் ஆறு முன்னெச்சரிக்கை சமிக்ஞை முறையை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் பொருத்துகிறது.
அந்த பேரிடர் எச்சரிக்கை கருவிகளைப் பொருத்தும் பணி தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெகு விரைவில் அப்பணி முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையம் மூலம் மேற்கொண்ட கண்காணிப்பின் வாயிலாக அடையாளம் காணப்பட்ட வெள்ள அபாயம் மிகுந்த 44 இடங்களில் இந்த கருவிகளைப் பொருத்தி விட்டோம். மேலும் ஆறு கருவிகள் பொருத்தப்படவுள்ள நிலையில் கருவிகளின் மொத்த எண்ணிக்கை பத்தாக உயரும் என அவர் தெரிவித்தார்.
ஆறுகளில் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் அது குறித்து பொது மக்களிடம் விரைவாக தெரிவிக்க இயலும். இதன் மூலம் அவர்கள் முன்னேற்பாடுகளைச் செய்யவும் விரைந்து வீடுகளிலிருந்து வெளியேறவும் இயலும் என்றார் அவர்.
இங்குள்ள எம்.பி.எஸ்.ஜே. பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற பேரிடர் உதவி பயிற்சிப் பட்டறையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் மஸ்லான் வான் மாமாட்டும் கலந்து கொண்டார்.
கால்வாய் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் மூன்றில் இரு மடங்கு நிரம்பியவுடன் இந்த கருவி எச்சரிக்கை ஒலியை எழுப்பும் என்று ஜோஹாரி சொன்னார்.